சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவியலூர் - நட்டபாடை அருள்தரு சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு யோகாநந்தேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=yEIrdDSLnys  
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,
பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,
அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.


[ 1]


ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான்,
ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான்,
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள்
வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.


[ 2]


செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும்,
பெய்ம்மின், பலி! என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.


[ 3]


அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி,
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே.


[ 4]


எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய்,
பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய்,
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.


[ 5]


Go to top
வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான்,
திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை
அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.


[ 6]


மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்;
ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன்; என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.


[ 7]


பொருவார் எனக்கு எதிர் ஆர்! எனப் பொருப்பை எடுத்தான் தன்
கரு மால் வரை கரம், தோள், உரம், கதிர் நீள் முடி, நெரிந்து,
சிரம் ஆயின கதற, செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே.


[ 8]


வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்,
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.


[ 9]


தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்;
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.


[ 10]


Go to top
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,
தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்
விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவியலூர்
1.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குரவம் கமழ் நறு மென்
Tune - நட்டபாடை   (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song