சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=h8QZrRo4xp4
1.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவேட்களம் - தக்கராகம் அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.
[ 1]
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.
[ 2]
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.
[ 3]
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.
[ 4]
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.
[ 5]
Go to top
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்
பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,
மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.
[ 6]
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,
நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.
[ 7]
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,
தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.
[ 8]
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான்-வேட்கள நன்நகராரே.
[ 9]
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.
[ 10]
Go to top
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவேட்களம்
1.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
Tune - தக்கராகம்
(திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
5.042
திருநாவுக்கரசர்
தேவாரம்
நன்று நாள்தொறும் நம் வினை
Tune - திருக்குறுந்தொகை
(திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400