சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=C_MQ8sSlZyk
1.061
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருச்செங்காட்டங்குடி - பழந்தக்கராகம் அருள்தரு திருக்குழல்மாதம்மை உடனுறை அருள்மிகு கணபதீசுவரர் திருவடிகள் போற்றி
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.
[ 1]
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.
[ 2]
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே.
[ 3]
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே.
[ 4]
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.
[ 5]
Go to top
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,
திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே.
[ 6]
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.
[ 7]
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,
சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்
காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே.
[ 8]
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,
தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,
கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே.
[ 9]
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே.
[ 10]
Go to top
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்செங்காட்டங்குடி
1.061
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறை கொண்ட மலர் தூவி,
Tune - பழந்தக்கராகம்
(திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
3.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!
Tune - பஞ்சமம்
(திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
6.084
திருநாவுக்கரசர்
தேவாரம்
பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
Tune - திருத்தாண்டகம்
(திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400