சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) - வியாழக்குறிஞ்சி அருள்தரு அர்த்தநாரீசுவரி உடனுறை அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY  
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

[ 1]


அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.


[ 2]


பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.


[ 3]


வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.


[ 4]


பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.


[ 5]


Go to top
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.


[ 6]


நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.


[ 7]


மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,
கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.


[ 8]


செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.


[ 9]


போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.


[ 10]


Go to top
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
1.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண் நீறு அணிந்து,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song