சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநெல்லிக்கா - இந்தளம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு நெல்லிவனேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=rFp-_9F8Jus  
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 1]


பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;
விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 2]


நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக்
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 3]


தலைதானது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 4]


தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல்
உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச்
சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 5]


Go to top
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி;
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்;
குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 6]


பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;
இறை தான்; இறவாக் கயிலைமலையான்;
மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 7]


மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை;
மிறைத்தான், வரையால், அரக்கன் மிகையைக்
குறைத்தான், சடைமேல் குளிர் கோல்வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 8]


தழல் தாமரையான், வையம் தாயவனும்,
கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்
அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 9]


கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
என் அத்தா! என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.


[ 10]


Go to top
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநெல்லிக்கா
2.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறத்தால் உயிர் காவல் அமர்ந்து
Tune - இந்தளம்   (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song