சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ
2.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருமயிலை (மயிலாப்பூர்) - சீகாமரம் அருள்தரு கற்பகவல்லியம்மை உடனுறை அருள்மிகு கபாலீசுவரர் திருவடிகள் போற்றி
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
பலவகை உடற்பிணிகள் அகல ஓத வேண்டிய பதிகம்
Audio: https://sivaya.org/audio/2.047 matitita punnai.mp3
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 1]
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 2]
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 3]
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 4]
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 5]
Go to top
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி,
நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 6]
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக்
கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 7]
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்,
கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள்
கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 8]
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 9]
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில்
கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!
[ 10]
Go to top
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருமயிலை (மயிலாப்பூர்)
2.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு இட்ட புன்னை அம்கானல்
Tune - சீகாமரம்
(திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400