சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஆமாத்தூர் - சீகாமரம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=h2o01V9o3ZU  
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!


[ 1]


பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,
வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே!
கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார்
அகில் தந்து, பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!


[ 2]


நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறு மெய் பூசி, மால் அயன்
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்?
பூண்ட கேழல் மருப்பு, அரா, விரிகொன்றை, வாள் வரி ஆமை, பூண் என
ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!


[ 3]


சேலின் நேரன கண்ணி வெண் நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன் இசை
பாட, நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!


[ 4]


தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி. நின் கழல் ஏத்துவார் அவர்
உண்டியால் வருந்த, இரங்காதது என்னை கொல் ஆம்?
வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!


[ 5]


Go to top
ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!


[ 6]


மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல்
ஆம்?
பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவு
அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!


[ 7]


நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்து இடை
வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்?
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபது தான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!


[ 8]


செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி
வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்?
தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,
ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!


[ 9]


புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி
பத்தர் பேண, நின்ற பரம் ஆய பான்மை அது என்?
முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன்! என்று இமையோர் பரவிடும்
அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!


[ 10]


Go to top
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆமாத்தூர்
2.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துன்னம் பெய் கோவணமும் தோலும்
Tune - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
2.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குன்ற வார்சிலை, நாண் அரா,
Tune - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
7.045   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song