சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநாரையூர் - பியந்தைக்காந்தாரம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=axSzv-rL_iM  
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!


[ 1]


ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய்
ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளைமதி சூடு சென்னி விதி ஆன
வேத விகிர்தன்,
கான் இடை ஆடி, பூதப்படையான், இயங்கு விடையான்,
இலங்கு முடிமேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல், நண்ணு திரு
நாரையூர் கைதொழவே.


[ 2]


ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், துயர்
உற்ற தீங்கு விரவி,
பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு
உற்ற வண்ணம், அகலும்
போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ்
வான் உளோர்கள் புணரும்
தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு
நாரையூர் கைதொழவே.


[ 3]


தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற,
உற்ற உலகின்
தாய் உறு தன்மை ஆய, தலைவன் தன் நாமம் நிலை ஆக
நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி, கோல விடம்
உண்ட கண்டன், முடிமேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன், மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.


[ 4]


வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும்; தவம் ஆய
தன்மை வரும் வான்
மிசையவர்; ஆதி ஆய திருமார்பு இலங்கு விரிநூலர்;
விண்ணும் நிலனும்
இசையவர், ஆசி சொல்ல; இமையோர்கள் ஏத்தி;
அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற, நின்ற சிவன்; மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.


[ 5]


Go to top
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம்
உணர்வு ஆக்கும்; உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும்; நெஞ்சில்
நிறைவு ஆற்றும்; நேசம் வளரும்
மறை வளர் நாவன், மாவின் உரி போர்த்த மெய்யன்,
அரவு ஆர்த்த அண்ணல், கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற
திரு நாரையூர் கைதொழவே.


[ 6]


தனம் வரும்; நன்மை ஆகும்; தகுதிக்கு உழந்து வரு திக்கு
உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று, நினைவு
ஒன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம், மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன்
தெரிந்த, அவுணர்
சினம் ஒரு கால் அழித்த, சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.


[ 7]


உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி
அஞ்சும்; ஆதல் உற, நீர்
மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு
இலாத கடலின்
அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய,
தடக்கை முடிகள்,
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.


[ 8]


வேறு உயர் வாழ்வு தன்மை; வினை; துக்கம், மிக்க பகை
தீர்க்கும்; மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க, நின்ற கரவைக்
கரந்து, திகழும்
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும்
நேட, எரி ஆய்ச்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.


[ 9]


மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும்; உள்ளம்
வெளி ஆக்கும்; முன்னி உணரும்,
படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி
பாடி ஆடி பெருமை!
உடையினை விட்டு உளோரும், உடல் போர்த்து
உளோரும், உரை மாயும் வண்ணம் அழிய,
செடி பட வைத்து, உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.


[ 10]


Go to top
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாரையூர்
2.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரையினில் வந்த பாவம், உணர்
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காம்பினை வென்ற மென்தோளி பாகம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கடல் இடை வெங்கடு நஞ்சம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
5.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வீறு தான் உடை வெற்பன்
Tune - திருக்குறுந்தொகை   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
6.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
Tune - திருத்தாண்டகம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
11.031   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
Tune -   (திருநாரையூர் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song