சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) - பியந்தைக்காந்தாரம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=RK-BhZK3vkU  
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.


[ 1]


இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
நம்பன் அவனே.


[ 2]


சூடக முன்கை மங்கை ஒரு பாகம் ஆக, அருள்
காரணங்கள் வருவான்;
ஈடு அகம் ஆன நோக்கி, இடு பிச்சை கொண்டு, படு
பிச்சன் என்று பரவ,
தோடு அகம் ஆய் ஓர் காதும், ஒரு காது இலங்கு குழை
தாழ, வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி, மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன்
அவனே.


[ 3]


சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி ஆய சோதி; கதி ஆக
நின்ற கடவுள
ஆய் அகம் என்னுள் வந்த, அருள் அருள் ஆய,
செல்வன்; இருள் ஆய கண்டன்; அவனித்
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்
கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி, மறையோர்கள் பேணும்
நறையூரில் நம்பன் அவனே.


[ 4]


நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை சுற்றி நிகழ்
அமபலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
ஆய இறைவன்;
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
நம்பன் அவனே.


[ 5]


Go to top
கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
நம்பன் அவனே.


[ 6]


ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் அவை ஆர,
ஆடல் அரவம்
மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
விடம் கொள் மிடறன்
துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
ஆர, வென்றி அருளும்,
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
நம்பன் அவனே.


[ 7]


அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும்
சிலம்பொடு இசைய,
கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு
உற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை
கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில்
நம்பன் அவனே.


[ 8]


குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
அவனே.


[ 9]


துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்
தாமும், அல்ல சமணும்,
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான்;
பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண, முறை மாதர்
பாடி மருவும்
நவமணி துன்று கோயில், ஒளி பொன் செய் மாட
நறையூரில் நம்பன் அவனே.


[ 10]


Go to top
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊர் உலாவு பலி கொண்டு,
Tune - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
1.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை கொள் சடையர்; புலியின்
Tune - தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
7.093   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நீரும் மலரும் நிலவும் சடைமேல்
Tune - குறிஞ்சி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song