சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கேதீச்சரம் - நட்டராகம் அருள்தரு கௌரிநாயகியம்மை உடனுறை அருள்மிகு கேதீச்சுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=lGhLAa2QCPA  
விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி
அம்பா,
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி
எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி
மாதோட்டம்,
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே.


[ 1]


பாடல் வீணையர், பல பல சரிதையர், எருது உகைத்து
அரு நட்டம்
ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு
இருள் கண்டத்தர்,
ஈடம் ஆவது இருங்கடல் கரையினில் எழில் திகழ்
மாதோட்டம்,
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ, கெடும், இடர்
வினைதானே.


[ 2]


பெண் ஒர் பாகத்தர், பிறை தவழ் சடையினர், அறை கழல்
சிலம்பு ஆர்க்கச்
சுண்ணம் ஆதரித்து ஆடுவர், பாடுவர், அகம்தொறும் இடு
பிச்சைக்கு
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர், உயர்தரு
மாதோட்டத்து,
அண்ணல், நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை
அடையாவே.


[ 3]


பொடி கொள் மேனியர், புலி அதள் அரையினர், விரிதரு
கரத்து ஏந்தும்
வடி கொள் மூ இலை வேலினர், நூலினர், மறிகடல்
மாதோட்டத்து
அடிகள், ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர்
ஆகி,
முடிகள் சாய்த்து, அடி பேண வல்லார் தம்மேல் மொய்த்து
எழும் வினை போமே.


[ 4]


நல்லர், ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம்
அடைந்தவர்க்கு அருள் ஈய
வல்லர், பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர், மலி கடல்
மாதோட்டத்து
எல்லை இல் புகழ் எந்தை, கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து
ஏத்தி,
அல்லல் ஆசு அறுத்து, அரன் அடி இணை தொழும்
அன்பர் ஆம் அடியாரே.


[ 5]


Go to top
பேழை வார்சடைப் பெருந் திருமகள் தனைப் பொருந்த
வைத்து, ஒருபாகம்
மாழை அம் கயல் கண்ணிபால் அருளிய பொருளினர்,
குடிவாழ்க்கை
வாழை அம்பொழில் மந்திகள் களிப்பு உற மருவிய
மாதோட்ட,
கேழல் வெண்மருப்பு அணிந்த நீள் மார்பர், கேதீச்சுரம்
பிரியாரே.


[ 6]


பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளிப் பல்
உலகினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை
கோயில்
வண்டு பண் செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம் இடு
மாதோட்டம்,
தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள் செய் கேதீச்சுரம்
அதுதானே.


[ 7]


தென் இலங்கையர் குலபதி, மலை நலிந்து எடுத்தவன், முடி
திண்தோள
தன் நலம் கெட அடர்த்து, அவற்கு அருள் செய்த
தலைவனார் கடல்வாய் அப்
பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய
மாதோட்டத்து,
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து
உள்ளாரே.


[ 8]


பூ உளானும் அப் பொரு கடல் வண்ணனும், புவி இடந்து
எழுந்து ஓடி,
மேவி நாடி, நுன் அடி இணை காண்கிலா வித்தகம் என்
ஆகும்?
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்நகர்
மன்னி,
தேவி தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த
எம்பெருமானே!


[ 9]


புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
அடைமி(ன்)னே!


[ 10]


Go to top
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர்
மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை,
அணி காழி
நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு
பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கேதீச்சரம்
2.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விருது குன்ற, மாமேரு வில்,
Tune - நட்டராகம்   (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை)
7.080   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நத்தார் புடை ஞானன்; பசு
Tune - நட்டபாடை   (திருக்கேதீச்சரம் கேதீசுவரர் கௌரியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song