சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=COYFQcwgvkk
3.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருப்புனவாயில் - காந்தாரபஞ்சமம் அருள்தரு கருணையீசுவரியம்மை உடனுறை அருள்மிகு புனவாயிலீசுவரர் திருவடிகள் போற்றி
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.
[ 1]
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய்,
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே.
[ 2]
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்
படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே!
[ 3]
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே
பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,
பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற
பரமேட்டியே.
[ 4]
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,
புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,
ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,
மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.
[ 5]
Go to top
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய்,
கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்
போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,
சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே.
[ 6]
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு இடைத்
திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய்,
பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில்
இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.
[ 7]
மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி ஒல்கிட,
வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய,
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த, புனவாயிலே.
[ 8]
திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல்
கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்-
நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கிய
பொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே.
[ 9]
போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்-
சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!
போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே.
[ 10]
Go to top
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புனவாயில்
3.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
Tune - காந்தாரபஞ்சமம்
(திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)
7.050
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சித்தம்! நீ நினை! என்னொடு
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400