சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பனந்தாள் - பஞ்சமம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சடையப்பஈசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=3JbxFHtr2P8  
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.


[ 1]


விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 2]


உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர்
நால்மறையான்;
மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 3]


சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும்,
போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த
தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே!


[ 4]


விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும்
தடம் புனல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 5]


Go to top
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;
தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும், அணிந்த
சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 6]


மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்;
சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்;
அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த
தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 7]


செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து
முற்றும் வெண் நீறு அணிந்த திருமேனியன்; மும்மையினான்;
புற்று அரவம், புலியின்(ன்) உரி-தோலொடு, கோவணமும்,
தற்றவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 8]


வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,
புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;
நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்
தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 9]


ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்
நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த்
தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.


[ 10]


Go to top
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பனந்தாள்
3.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் பொலி நெற்றியினான், திகழ்
Tune - பஞ்சமம்   (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song