சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=qxnlxhDjPz4
3.089
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருக்கொச்சைவயம் (சீர்காழி) - சாதாரி அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி,
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.
[ 1]
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி,
கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு, கோட்டாறு
ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!
[ 2]
பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி,
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!
[ 3]
கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ் கதலி மாடே
வந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட,
கொந்து வார் குழலினார் குதி கொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!
[ 4]
மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டி
சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை தன்பால்,
உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த,
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!
[ 5]
Go to top
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே,
உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர்
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல்-தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!
[ 6]
கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில் கூடி, மந்தி
கண்ட வார்கழை பிடித்து ஏறி, மா முகில்தனைக் கதுவு கொச்சை,
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய, ஆலம்
உண்ட மா கண்டனார் தம்மையே உள்கு, நீ! அஞ்சல், நெஞ்சே!
[ 7]
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை எடுத்து,
ஆர்த்த வாய்கள்
உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ள
மடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே,
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே
பேணு, நெஞ்சே!
[ 8]
அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!
[ 9]
கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும்,
இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர்
நடு உறை நம்பனை; நால்மறையவர் பணிந்து ஏத்த, ஞாலம்
உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
[ 10]
Go to top
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள்
கொச்சை
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே
ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின்
மேலே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கொச்சைவயம் (சீர்காழி)
2.083
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
2.089
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
3.089
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருந்து மா களிற்று இள
Tune - சாதாரி
(திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400