சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc
4.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) - திருநேரிசை:கொல்லி அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.
[ 1]
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.
[ 2]
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.
[ 3]
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.
[ 4]
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.
[ 5]
Go to top
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.
[ 6]
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.
[ 7]
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.
[ 8]
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.
[ 9]
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
4.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அது பாடிப் பிச்சைக்கு
Tune - திருநேரிசை:கொல்லி
(திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
7.021
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
Tune - நட்டராகம்
(திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400