சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU
4.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) - திருநேரிசை அருள்தரு மின்னனையாளம்மை உடனுறை அருள்மிகு பிரியாதநாதர் திருவடிகள் போற்றி
மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை,
கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை,
பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை,
நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.
[ 1]
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும்
பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை,
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே,
[ 2]
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை,
பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை,
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே.
[ 3]
மைஞ் ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழு ஒன்று ஏந்திக்
கைஞ் ஞவில் மானினோடும் கனல்-எரி ஆடினானை,
பிஞ்ஞகன் தன்னை, அம் தண் பெருவேளூர் பேணினானை,
பொய்ஞ் ஞெக நினையமாட்டாப் பொறி இலா அறிவினேனே!
[ 4]
ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை,
வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை,
பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை,
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே.
[ 5]
Go to top
கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை,
கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை,
பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை,
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே.
[ 6]
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்
முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய
பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை,
மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே.
[ 7]
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை,
வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை,
பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை,
அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே.
[ 8]
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்)
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்;
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே.
[ 9]
பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை,
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை)
3.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை
Tune - பஞ்சமம்
(திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)
4.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அணி நாவினானை, மறப்பு
Tune - திருநேரிசை
(திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400