சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாய்மூர் - திருக்குறுந்தொகை அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி
திருவருள் நலம்பெற்ற இரு பெருங்குரவர்களும் அடியார் புடைசூழத் திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கினர். அன்றிரவு திருநாவுக்கரசர் தாம் அரிதில் திறக்கப்பாடியதையும், ஆளுடைய பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடியதையும் எண்ணித் தம் பாடலுக்குக் கதவு திறக்கக் காலந்தாழ்ந்தமைக்குக் காரணம், இறைவன் திருக்குறிப்பை நாம் உணராது அயர்த்தமையே என்று கவைலகொண்டு திருமடத்தில் ஓர் பால் அறிதுயில் கொண்டார். அவர் கனவில் இறைவன் தோன்றி நாம் திருவாய்மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்து வா என்று கூறி மறைய, உடனே துயிலெழுந்து நாவுக்கரசரும் இறைவனைப் பின் தொடர்ந்து எங்கே யென்னை என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே வாய்மூருக்குச் சென்றார்.
Audio: https://www.youtube.com/watch?v=gP5OpbzqOs4  
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?


[ 1]


மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?


[ 2]


தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்;
அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்;
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்;
வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?


[ 3]


கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?


[ 4]


ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க்
கள்ளியார் அவர் போல, கரந்ததே!


[ 5]


Go to top
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?


[ 6]


பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?


[ 7]


திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்;
மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!


[ 8]


தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா,
புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?


[ 9]


தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாய்மூர்
2.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் என
Tune - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   எங்கே என்ன, இருந்த இடம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
6.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட அடியார், பரவக் கண்டேன்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song