சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.069   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பள்ளியின் முக்கூடல் - திருத்தாண்டகம் அருள்தரு மைமேவுங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு முக்கோணவீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=1OArubB8AdQ  
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,   அயனொடு மால் அறியாத ஆதியானை,
தார் ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை, சங்கரனை, தன் ஒப்பார் இல்லாதானை,
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நீள் விசும்பு ஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 1]


விடையானை, விண்ணவர்கள் எண்ணத்தானை, வேதியனை, வெண்திங்கள் சூடும் சென்னிச்
சடையானை, சாமம் போல் கண்டத்தானை, தத்துவனை, தன் ஒப்பார் இல்லாதானை,
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை, அயில் கொள் சூலப்-
படையானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 2]


பூதியனை, பொன்வரையே போல்வான் தன்னை, புரி சடைமேல் புனல் கரந்த புனிதன் தன்னை,
வேதியனை, வெண்காடு மேயான் தன்னை, வெள் ஏற்றின் மேலானை, விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை, ஆதிரை நன்நாளான் தன்னை, அம்மானை, மைம்மேவு கண்ணியாள் ஓர்-
பாதியனை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 3]


போர்த்தானை, ஆனையின் தோல்; புரங்கள்
மூன்றும் பொடி ஆக எய்தானை; புனிதன் தன்னை;
வார்(த்)த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை; மறிகடலுள் நஞ்சு உண்டு, வானோர் அச்சம்
தீர்த்தானை; தென் திசைக்கே காமன் செல்ல, சிறிது அளவில் அவன் உடலம் பொடியா அங்கே
பார்த்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 4]


அடைந்தார் தம் பாவங்கள், அல்லல், நோய்கள், அருவினைகள், நல்குரவு, செல்லா வண்ணம்
கடிந்தானை; கார்முகில் போல் கண்டத்தானை; கடுஞ் சினத்தோன் தன் உடலை நேமியாலே;
தடிந்தானை; தன் ஒப்பார் இல்லாதானை; தத்துவனை; உத்தமனை; நினைவார் நெஞ்சில்
படிந்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 5]


Go to top
கரந்தானை, செஞ்சடை மேல் கங்கை வெள்ளம்; கனல் ஆடு திருமேனி, கமலத்தோன் தன்
சிரம் தாங்கு கையானை; தேவதேவை; திகழ் ஒளியை; தன் அடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை; மண் ஆய், விண் ஆய், மறிகடல் ஆய், மால் விசும்பு ஆய், மற்றும் ஆகி,
பரந்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 6]


நதி ஆரும் சடையானை, நல்லூரானை, நள்ளாற்றின் மேயானை, நல்லத்தானை,
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை,   மறைக்காடு மேயானை, ஆக்கூரானை,
நிதியாளன் தோழனை, நீடூரானை, நெய்த்தானம் மேயானை, ஆரூர் என்னும்
பதியானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 7]


நல்-தவனை; நால்மறைகள் ஆயினானை; நல்லானை; நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனை; செஞ்சடை மேல்-திங்கள் சூடும், திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேய,
கொற்றவனை; கூர் அரவம் பூண்டான் தன்னை;
குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும்
பற்றவனை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 8]


ஊனவனை, உடலவனை, உயிர் ஆனானை, உலகு ஏழும் ஆனானை, உம்பர் கோவை,
வானவனை, மதி சூடும் வளவியானை, மலைமகள்   முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனை, கயிலாயமலை உளானை, கலந்து உருகி நைவார் தம் நெஞ்சினுள்ளே
பானவனை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 9]


தடுத்தானைத் தான் முனிந்து தன் தோள் கொட்டித்   தடவரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி, எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு,
கொடுத்தானை, பேரோடும் கூர்வாள் தன்னை; குரை கழலால் கூற்றுவனை மாள, அன்று,
படுத்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பள்ளியின் முக்கூடல்
6.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,
Tune - திருத்தாண்டகம்   (திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணவீசுவரர் மைமேவுங்கண்ணியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song