சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=XOG7u08TkQY
7.014
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - தக்கராகம் அருள்தரு பாலசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி
பின்னர் காவிரியின் இருமருங்குமுள்ள தலங்களை வழிபட விரும்பித் திருவானைக்காவை யடைந்தார். இறைவனை வழிபட்டு, அங்கிருந்து திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்து தமக்குப் பொன்னைத் தந்தருள வேண்டுமென்னும் குறிப்புடன் பெருமானை வணங்கினார். இறைவன் பொன்னைத் தந்தருளாமையால் இறைவன் பால் மனப்புழுக்கம் கொண்டு, வைத்தனன் தனக்கே என்று தொடங்கிப் பதிகம் பாடி, இவரலாதில்லையோ பிரானார் என இகழ்ந்து கூறிப் பின் அதனையே பொறுத்தருளவேண்டுமென்று திருக்கடைக் காப்பும் அருளிச்செய்தார்.
வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்;
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 1]
அன்னையே! என்னேன்; அத்தனே! என்னேன்; அடிகளே அமையும் என்று இருந்தேன்;
என்னையும், ஒருவன் உளன் என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்;
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 2]
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; உள்ளமே அமையும் என்று இருந்தேன்;
செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர்,
அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[ 3]
நாச் சில பேசி, நமர் பிறர் என்று, நன்று தீது என்கிலர்; மற்று ஓர்
பூச்சு இலை; நெஞ்சே! பொன் விளை கழனிப் புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கைப்
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர் தாம் பலரையும் ஆட்கொள்வர்; பரிந்து ஓர்
பேச்சு இலர்; ஒன்றைத் தர இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 4]
வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்,
புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகிப்
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 5]
Go to top
செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்; தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்; ஆவதும் அறிவர், எம் அடிகள்;
படைத்தலைச் சூலம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிடித்த வெண்நீறே பூசுவது ஆனால், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 6]
கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்;
மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்;
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்;
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[ 7]
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன்; நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்;
கணம் படிந்து ஏத்தி, கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்;
பணம் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிணம் படு காட்டில் ஆடுவது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[ 8]
குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே! குற்றேவல் நாள்தொறும் செய்வான்;
இழைத்த நாள் கடவார்; அன்பிலரேனும், எம்பெருமான்! என்று எப்போதும்
அழைத்தவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[ 9]
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில்,
மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்;
பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 10]
Go to top
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்;
உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்;
அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள்,
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 11]
ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; எம்பெருமான்! என்று எப்போதும்
பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள்
வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன்,
பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[ 12]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
1.044
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துணி வளர் திங்கள் துளங்கி
Tune - தக்கராகம்
(திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
7.014
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வைத்தனன் தனக்கே, தலையும் என்
Tune - தக்கராகம்
(திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400