சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.016   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

கலயநல்லூர் (சாக்கோட்டை) - தக்கராகம் அருள்தரு அமிர்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகலைநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=MQ0RTepwG6U  
Audio: https://www.youtube.com/watch?v=utO6fHth1FM  
குரும்பை முலை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு, குறிப்பினொடும் சென்று, அவள்  தன் குணத்தினை நன்கு அறிந்து,
விரும்பு வரம் கொடுத்து, அவளை வேட்டு, அருளிச்செய்த விண்ணவர்கோன்; கண்  நுதலோன்; மேவிய ஊர் வினவில்
அரும்பு அருகே சுரும்பு அருவ, அறுபதம் பண் பாட, அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில்
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும், கழனிக் கமலங்கள் முகம் மலரும், கலய    நல்லூர் காணே .


[ 1]


செரு மேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு  அருளி,
இருள் மேவும் அந்தகன் மேல்-திரிசூலம் பாய்ச்சி, இந்திரனைத் தோள் முரித்த இறையவன்  ஊர் வினவில்
பெரு மேதை மறை ஒலியும், பேரி-முழவு ஒலியும், பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும், பெருக;
கருமேதி புனல் மண்ட; கயல் மண்ட, கமலம்; களி வண்டின் கணம் இரியும் கலய நல்லூர்  காணே .


[ 2]


இண்டை மலர் கொண்டு, மணல் இலிங்கம் அது இயற்றி, இனத்து ஆவின் பால் ஆட்ட,   இடறிய தாதையைத் தாள்
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்தத் தொடர்ந்து அவனைப் பணி கொண்ட   விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும், மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு    நிறைவு எய்தி,
கண்டவர்கள் மனம் கவரும், புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்து ஆடும், கலய நல்லூர் காணே.


[ 3]


மலை மடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே,   வல் இருள் ஆய் எல்லா-
உலகு உடன் தான் மூட, இருள் ஓடும் வகை, நெற்றி ஒற்றைக் கண் படைத்து உகந்த  உத்தமன் ஊர் வினவில்
அலை அடைந்த புனல் பெருகி, யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி, வரும்  அரிசிலின் தென் கரை மேல்,
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓமப் புகையால் கணமுகில் போன்ற(அ)ணி கிளரும், கலய நல்லூர் காணே .




[ 4]


நிற்பானும், கமலத்தில் இருப்பானும், முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப,    நினைந்தருளி, அவர்க்கு ஆய்
வெற்பு ஆர் வில், அரவு நாண், எரி அம்பால், விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன்  ஊர் வினவில்
சொல்பால பொருள் பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லித் துதித்து, இறை   தன் திறத்தே
கற்பாரும் கேட்பாரும் ஆய், எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலய நல்லூர் காணே .


[ 5]


Go to top
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்விப் பெருந் தேவர் சிரம் தோள் பல் கரம் கண் பீடு அழியச்
செற்று, மதிக்கலை சிதையத் திருவிரலால்-தேய்வித்து, அருள் பெருகு சிவபெருமான் சேர்  தரும் ஊர் வினவில்
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் சேர் அரிசிலின் தென் கரை மேல்,
கற்றினம் நல் கரும்பின் முளை கறி கற்க, கறவை கமழ் கழுநீர் கவர் கழனி, கலய நல்லூர்  காணே .


[ 6]


இலங்கையர் கோன் சிரம்பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி,
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி, நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன்   ஊர் வினவில்
பலங்கள் பல திரை உந்தி, பரு மணி பொன் கொழித்து, பாதிரி சந்து அகிலினொடு   கேதகையும் பருங்கி,
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல், கயல் உகளும் வயல் புடை   சூழ், கலய நல்லூர் காணே .


[ 7]


மால் அயனும் காண்பு அரிய மால் எரி ஆய் நிமிர்ந்தோன், வன்னி மதி சென்னிமிசை  வைத்தவன், மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன், விடை ஊரும் விமலன், உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவ, கோல மயில் ஆல, சுரும்பொடு வண்டு இசை முரல, பசுங்கிளி  சொல்-துதிக்க,
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலய நல்லூர்  காணே .


[ 8]


பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்,
கரும்புவிலின் மலர் வாளிக் காமன் உடல் வேவக் கனல் விழித்த கண் நுதலோன், கருதும்  ஊர் வினவில்
இரும் புனல் வெண் திரை பெருகி, ஏலம், இலவங்கம், இருகரையும் பொருது அலைக்கும்   அரிசிலின் தென் கரை மேல்,
கரும் பு(ன்)னை வெண் முத்து அரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின் காட்டும் கடி பொழில் சூழ், கலய நல்லூர் காணே .


[ 9]


தண் கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில்-தடம் கொள் பெருங் கோயில்தனில்,-தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன் நாள் வழிபாடு செய்ய, மகிழ்ந்து அருளி இருந்த பரன்   மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்,
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு, கலய நல்லூர் காணே .


[ 10]


Go to top
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன், தாமரையோன் தலை கலனாக்   காமரம் முன் பாடி
உண் பலி கொண்டு உழல் பரமன், உறையும் ஊர், நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலய நல்லூர் அதனை,
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன், நாவலர் கோன், ஆரூரன் நாவின்  நயந்து உரை செய்
பண் பயிலும் பத்தும் இவை பத்தி செய்து நித்தம் பாட வல்லார், அல்லலொடு பாவம் இலர்,  தாமே .


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கலயநல்லூர் (சாக்கோட்டை)
7.016   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குரும்பை முலை மலர்க் குழலி
Tune - தக்கராகம்   (கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலைநாதர் அமிர்தவல்லியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song