சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.055   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்புன்கூர் - தக்கேசி அருள்தரு சொக்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகநாதர் திருவடிகள் போற்றி
ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாட மழை பெய்தது. கூறியபடி மன்னனும் பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு அளித்தான். ஆனால், பெய்த மழை பெய்ததுதான். நில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. இடைவெளிவிட்டுக்கூட நிற்கவில்லை. பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த மேலும் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்துக்கு அளித்தால், பதிகம் பாடி மழையை நிறுத்தலாம் என்று மன்னனிடம் கூற….மன்னனும் ஒப்புக் கொள்ள… பதிகம் பாடி மழை நிற்க, அடுத்து பன்னிரண்டு வேலி நிலத்தை மன்னனிடமிருந்து பெறப்பட்டு இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார் சுந்தரர். இந்த வரலாற்றை சுந்தரர் அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே
மழை வேண்டல் பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=iosMgigd7YU  
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு    அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .


[ 1]


வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்;
உய்யக் கொள்க, மற்று எங்களை! என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும்
பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .




[ 2]


ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து,
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு,
பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .


[ 3]


நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்-
பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .




[ 4]


கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.


[ 5]


Go to top
இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள்
மயக்கம் இல் புலி, வானரம், நாகம், வசுக்கள், வானவர், தானவர், எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார்; பெறும் ஆர் அருள் கண்டு,
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .


[ 6]


போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து,
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட,
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.


[ 7]


மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.


[ 8]


அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து,
எறியும் மா கடல் இலங்கையர் கோனைத் துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு,
குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு, கோல வாளொடு நாள் அது கொடுத்த
செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.


[ 9]


கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை,
செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை,
உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புன்கூர்
1.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முந்தி நின்ற வினைகள் அவை
Tune - தக்கராகம்   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
7.055   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
Tune - தக்கேசி   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song