சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, பண் - சாளரபாணி (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mAbV4GbLfL8 Audio: https://www.youtube.com/watch?v=9UeX47SUCUY |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.031  
பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
பண் - சாளரபாணி (திருத்தலம் திருக்கடவூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி )
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர் வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம் உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே. | [1] |
மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில், விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்? பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே. | [2] |
பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர் வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார் கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே. | [3] |
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி, அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக் கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே. | [4] |
தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி, விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்; மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே! | [5] |
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்; அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக் கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே! | [6] |
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி, பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ! நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான் காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே! | [7] |
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்; உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்; எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே! | [8] |
சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய், பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும் மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே. | [9] |
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்- இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய, வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே. | [10] |