சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.095
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் பண் - சாதாரி (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3ofD_0bLR3o |
4.072
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் பண் - திருநேரிசை (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3Wr2qcFBuPM Audio: https://www.youtube.com/watch?v=ad3xSv41u9E |
4.100
திருநாவுக்கரசர்
தேவாரம்
மன்னும் மலைமகள் கையால் வருடின; பண் - திருவிருத்தம் (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=npcFMuLv1bM |
5.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
என்னில் ஆரும் எனக்கு இனியார் பண் - திருக்குறுந்தொகை (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=qlYtrb5igBg |
6.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் பண் - திருத்தாண்டகம் (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.095  
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
பண் - சாதாரி (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய வண்டு இசைக்கும் சடையீரே; வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார் தொண்டு இசைக்கும் தொழிலாரே. | [1] |
யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய தாழ்தரு சடைமுடியீரே; தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர் ஆழ்துயர் அருவினை இலரே. | [2] |
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய வள மதி வளர் சடையீரே; வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார் உளம் மதி மிக உடையாரே. | [3] |
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய கடி கமழ் சடைமுடியீரே; கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும் அடியவர் அருவினை இலரே. | [4] |
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய உமை ஒரு கூறு உடையீரே; உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார் அமைகிலர் ஆகிலர், அன்பே. | [5] |
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய தண் அருஞ் சடைமுடியீரே; தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர் விண்ணவர் அடைவு உடையோரே. | [6] |
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய நிழல் திகழ் மேனியினீரே; நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர் குழறிய கொடுவினை இலரே. | [7] |
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய தூர்த்தனைத் தொலைவு செய்தீரே; தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர் கூர்த்த நல் குணம் உடையோரே. | [8] |
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய அயனும் மால் அறிவு அரியீரே; அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும் இயல் உளார் மறுபிறப்பு இலரே. | [9] |
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய தேர் அமண் சிதைவு செய்தீரே; தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர் ஆர் துயர், அருவினை, இலரே. | [10] |
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை, நாடு அமர் ஞானசம்பந்தன் நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ், பாட வல்லார் பழி இலரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.072  
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்; பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்; வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்; எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [1] |
பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்; துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்; மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்; என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [2] |
மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்; பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்; செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்; எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [3] |
விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்; கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்; படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்; இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே. | [4] |
அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்; களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்; வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்; எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே. | [5] |
கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்; துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்; அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [6] |
பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்; மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்; உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும் எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [7] |
காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்; வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்; கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [8] |
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்; நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்; பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்; ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. | [9] |
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்; பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்; தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்; ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.100  
மன்னும் மலைமகள் கையால் வருடின;
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே. | [1] |
பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான் செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன் உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே. | [2] |
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால் வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில் பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே. | [3] |
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள் வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன் மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே. | [4] |
அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க் கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம் பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே. | [5] |
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே. | [6] |
போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத் தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே. | [7] |
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன் குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; கூட ஒண்ணாச் சயம்பு என்றே, தகு தாணு என்றே, சதுர்வேதங்கள் நின்று இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே. | [8] |
அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம் சய சய என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ் வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே. | [9] |
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது, உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன் இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.021  
என்னில் ஆரும் எனக்கு இனியார்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை; என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்; என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே. | [1] |
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால் கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ? தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே, | [2] |
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன் புனலும், கொன்றையும், சூடும் புரிசடை; அனலும், சூலமும், மான்மறி, கையினர் எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே. | [3] |
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை; குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே. | [4] |
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்; மன்னவன்; மதி அம் மறை ஓதியான்; முன்னம் அன்னவன் சேரலன், பூழியான், இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே. | [5] |
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்; அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை; குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே. | [6] |
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர் கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள் படைக்கணால் பருகப்படுவான் நமக்கு இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே. | [7] |
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே. | [8] |
விரியும் தண் இளவேனில் வெண்பிறை புரியும் காமனை வேவ, புருவமும் திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.! | [9] |
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடிபத்து உடையான் தனைக் கனிய ஊன்றிய காரணம் என்கொலோ, இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.089  
அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்; சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்; வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்; எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [1] |
கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்; ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்; ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்; ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [2] |
தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ நெறி ஆய் நின்றார் போலும்; பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்; இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [3] |
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்; ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்; தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும்; ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [4] |
சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய் நின்றார் போலும்; ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த அழகர் போலும்; தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை அளித்த தலைவர் போலும்; ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [5] |
பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்; பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர் போலும்; வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர் ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [6] |
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்; பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்; எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [7] |
மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார் போலும்; கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள் கழிப்பார் போலும்; நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர், வெளி, கால், ஆனார் போலும்; எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [8] |
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து, அளித்த கள்வர் போலும்; செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும்; மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி வணங்கல் உற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [9] |
அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும்; வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்; விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து, மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று, இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [10] |