சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மரு ஆர் குழலிமாது ஓர்
பண் - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4owEV1ZD9TU
4.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
பண் - திருநேரிசை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=qqYwyD7H4to
Audio: https://www.youtube.com/watch?v=kAw-cHbeOLs
5.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   கான் அறாத கடி பொழில்
பண் - திருக்குறுந்தொகை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=I1IbDrUL2rE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.025   மரு ஆர் குழலிமாது ஓர்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு சுகந்தவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு சொர்னபுரீசர் திருவடிகள் போற்றி )
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

[1]
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.

[2]
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

[3]
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

[4]
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

[5]
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.

[6]
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

[7]
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!

[8]
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய,
நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை
ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.

[9]
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா! என்ன, நில்லா, இடர்களே.

[10]
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.029   ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

[1]
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்
மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச்
செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே.

[2]
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே.

[3]
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி,
எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.

[4]
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்;
கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்;
நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச்
சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.

[5]
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.

[6]
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்;
எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்;
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே.

[7]
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள
பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.

[8]
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா
மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை;
தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.

[9]
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.036   கான் அறாத கடி பொழில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான்,
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி-
தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!

[1]
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச்
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே.

[2]
வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண் அலர்;
கீறு கோவண ஐ துகில் ஆடையர்;
தேறல் ஆவது ஒன்று அன்று, செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.

[3]
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து
இருவராய், இடுவார் கடை தேடுவார்,
தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்;
ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!

[4]
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான்,
ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்-
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்;
மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.

[5]
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவர் ஆவதன் காரணம் என்கொலோ-
திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார்,
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?

[6]
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர்,
மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர்
செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி
ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.

[7]
வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்;
அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.

[8]
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச்
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்,
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.

[9]
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால்
எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்;
அரிய வானம் அவர் அருள்செய்வரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list