சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புரை செய் வல்வினை தீர்க்கும் பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=C6ObhpNLQ3E |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.093  
புரை செய் வல்வினை தீர்க்கும்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருத்தெங்கூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வெள்ளிமலையீசுவரர் திருவடிகள் போற்றி )
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர் போற்ற, கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர் புரங்கள் இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு; எழில் சேர் விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [1] |
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை தீர்க்கும், கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு பிறையன்; பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [2] |
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை மழுவாள படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர், படர் புன் சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு தறுகண் விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [3] |
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள் பயப்பார்; கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி கண்டர் வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [4] |
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால் தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [5] |
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி அணி சுவண்டர்; எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த, சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [6] |
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார்; முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து இலங்க, பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்; வெண்பொடிப்பூசி வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [7] |
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க, கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்; தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர் விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [8] |
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்; பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால் ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக் கருதும் வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [9] |
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர், சமணர், சொல் தவிர, இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு ஒருகைக் கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக் கனன்று எழுந்த விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே! | [10] |
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரை, கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல், பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. | [11] |