சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடையார் தம் புரங்கள் மூன்றும் பண் - தக்கேசி (திருப்பல்லவனீச்சரம் பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FkNYeDBbc04 |
3.112
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரசு பாணியர், பாடல் வீணையர், பண் - பழம்பஞ்சுரம் (திருப்பல்லவனீச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=F5-uumlzpkA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.065  
அடையார் தம் புரங்கள் மூன்றும்
பண் - தக்கேசி (திருத்தலம் திருப்பல்லவனீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தராம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பல்லவனேசர் திருவடிகள் போற்றி )
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த, விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ, படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே. | [1] |
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர் கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம் மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி, பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே. | [2] |
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல் கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே. | [3] |
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம் நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால், பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே. | [4] |
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப, மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம் கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே, பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே. | [5] |
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர, கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம் சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய, பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே. | [6] |
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர் வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின் பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே. | [7] |
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன் தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர, பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே. | [8] |
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால், தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப, பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே. | [9] |
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார், கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம் தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார் பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே. | [10] |
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம் அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய், ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.112  
பரசு பாணியர், பாடல் வீணையர்,
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருப்பல்லவனீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [1] |
பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [2] |
பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அழகராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [3] |
பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [4] |
பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து பல்லவனீச்சுரத்து எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [5] |
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து இச்சை ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [6] |
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [7] |
பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [8] |
படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [9] |
பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [10] |
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே. | [11] |