சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=qqYwyD7H4to
4.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=kAw-cHbeOLs
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே
[ 1]
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்
மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச்
செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 2]
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 3]
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி,
எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 4]
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்;
கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்;
நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச்
சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 5]
Go to top
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 6]
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்;
எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்;
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 7]
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள
பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 8]
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா
மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை;
தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 9]
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்செம்பொன்பள்ளி
1.025
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மரு ஆர் குழலிமாது ஓர்
Tune - தக்கராகம்
(திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
4.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
Tune - திருநேரிசை
(திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
கான் அறாத கடி பொழில்
Tune - திருக்குறுந்தொகை
(திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400