சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.018   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - நட்டராகம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=vCaZ-4UzAlM  
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை;
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால்,
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 1]


கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்;
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால்
வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 2]


பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார்; பெண்ணோடு ஆணும் அல்லர்;
ஊரும் அது ஒற்றியூர்; மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்;
காரும் கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பு ஆவது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 3]


ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி,
கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே,
மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு,
யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 4]


ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்;
பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால்
பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.


[ 5]


Go to top
குறவனார் தம்மகள், தம் மகனார் மணவாட்டி; கொல்லை
மறவனாராய், அங்கு ஓர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்;
இறைவனார், ஆதியார், சோதியராய், அங்கு ஓர் சோர்வு படா
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 6]


பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்; நற்ற(வ்)வை, என்னைப் பெற்ற;
முற்ற(வ்)வை, தம் அ(ன்)னை, தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்;
செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வம் ஆகில்,
அத் தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.


[ 7]


உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான்,
தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்;
எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில்,
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 8]


இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்;
மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்;
சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .


[ 9]


கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப்
பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப்
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
3.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
Tune - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.018   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
Tune - நட்டராகம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.074   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
Tune - காந்தாரம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song