| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
திருக்குறுந் தாண்டகம்
Songs from 2032.0 to 2051.0 ( )
நிதியினை பவளத் தூணை
நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாளக்
கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன்-விடுகிலேனே
[2032.0]
காற்றினை புனலை தீயை
கடிமதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய
எழில் மணித் திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை
அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம்
கூறு-நீ கூறுமாறே
[2033.0]
பா இரும் பரவை-தன்னுள்
பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட
அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து
விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய
மைந்தனை-வணங்கினேனே
[2034.0]
கேட்க யான் உற்றது உண்டு
கேழல் ஆய் உலகம் கொண்ட
பூக் கெழு வண்ணனாரைப்
போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம்-தன்னால்
மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி
விழுங்கினேற்கு இனியவாறே
[2035.0]
Back to Top
இரும்பு அனன்று உண்ட நீர்போல்
எம் பெருமானுக்கு என்-தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை
மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போலப்
பருகினேற்கு இனியவாறே
[2036.0]
மூவரில் முதல்வன் ஆய
ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய
குரு மணித் திரளை இன்பப்
பாவினை பச்சைத் தேனை
பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர்
என் சொல்லிப் புகழ்வர் தாமே?
[2037.0]
இம்மையை மறுமை-தன்னை
எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
தலைமிசை மன்னுவாரே
[2038.0]
வானிடைப் புயலை மாலை
வரையிடைப் பிரசம் ஈன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றை
திருவினை மருவி வாழார்-
மானிடப் பிறவி அந்தோ
மதிக்கிலர் கொள்க-தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு
உறுதியே வேண்டினாரே
[2039.0]
உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
எழுமையும் துணை இலோமே
[2040.0]
Back to Top
சித்தமும் செவ்வை நில்லாது
என் செய்கேன் தீவினையேன்?
பத்திமைக்கு அன்பு உடையேன்
ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே
முழங்கு ஒளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால்
யாதும் ஒன்று அறிகிலேனே
[2041.0]
தொண்டு எல்லாம் பரவி நின்னைத்
தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான்
ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும்
ஆதி ஆய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி
நின்னையே பரவுவேனே
[2042.0]
ஆவியை அரங்க மாலை
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மை இல் தொண்டனேன் நான்
சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறு என்று
அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவிபோல் வண்ணர் வந்து என்
கண்ணுளே தோன்றினாரே
[2043.0]
இரும்பு அனன்று உண்ட நீரும்
போதரும் கொள்க என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
கண்-இணை களிக்குமாறே
[2044.0]
காவியை வென்ற கண்ணார்
கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி
அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும்
சூழ் புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது
பாவியேன் ஆயினேனே
[2045.0]
Back to Top
முன் பொலா இராவணன்-தன்
முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி-இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு
என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு
ஆட்டுவன் அடியனேனே
[2046.0]
மாய மான் மாயச் செற்று
மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
சூட்டுவன் தொண்டனேனே
[2047.0]
பேசினார் பிறவி நீத்தார்-
பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார்
என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க-
அலை கடல் வண்ணர்பாலே
[2048.0]
இளைப்பினை இயக்கம் நீக்கி
இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி
அன்பு அவர்கண்ணே வைத்து
துளக்கம் இல் சிந்தைசெய்து
தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
மெய்ம்மையைக் காண்கிற்பாரே?
[2049.0]
பிண்டி ஆர் மண்டை ஏந்தி
பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த
ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
மற்றையார்க்கு உய்யல் ஆமே?
[2050.0]
Back to Top
வானவர்-தங்கள்-கோனும்
மலர்மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும்
சேவடிச் செங் கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன
வண் தமிழ்-மாலை நாலைந்து
ஊனம்-அது இன்றி வல்லார்
ஒளி விசும்பு ஆள்வர் தாமே
[2051.0]
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:34:57 +0000