சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்
நக்கீரதேவர் அருளிய விநாயகர் அகவல்

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

Audio
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில் 60

எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

விநாயக விரைகழல் சரணே
Back to Top

நக்கீரதேவர் அருளிய விநாயகர் அகவல்

 

கணபதி வணக்கம் ஆசிரிய விருத்தம்

சீர்கொண்ட கரிமுகமு மைந்து கையும்
சிறந்தவா பரணமுடன் ஒற்றைக் கொம்பும்
ஏர்கொண்ட விமலர்கடங் கலியைத் தீர்த்து
எழில்குகற்கு முன்பிறந்து அமரர் மெச்சப்
போர்கொண்ட பிரணவமாய்ப்பிரண வத்துள்
பெருமைசிவ லிங்கமென வந்த மூலம்
கார்கொண்ட பிண்ட மெங்குந் தானாய்
காத்திடுங் கணபதியை வணங்குவோமே

அகவல்

சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணியமூர்த்தி
சங்கர னருளிய சற்குரு விநாயக
ஏழை யடியேன் இருவிழி காண

வேழ முகமும் வெண்பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலில் திருநீற் றழகும்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுத்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுடநன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்

சிந்தூரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தி னழகும்வீற் றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன்னாபரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்கு பட்டழகும்
உந்திச் சுழியும் உரோமத் தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந்தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சதங்கைப் பலதொளி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்க

தொகுது துந்துமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய் யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காட்சி தந்தருள்
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு
இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி

வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜாட் சரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அக்ஷர வடிவும்
இடைபிங் கலைக ளிரண்டி னடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலங்குறித்து
மண்டல மூன்றும் வாயுவோர் பத்தும்

குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையும் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டி
பஞ்சமூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்ச சக்திகளின் பாதமும் காட்டி
நவ்விட மௌவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்

நைவிழிஞான மனோன்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டல மான வெளியையும் காட்டி
ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை
இகபர சக்கர விதிதனைக் காட்டிப்
புருவ நடுவணை பொற்கம லாசான்
திருவிளை யாடலுந் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்

சத்தம் பிறந்த தலத்தையும் காட்டித்
தத்துவந் தொண்ணூற் றாரையும் நீக்கிக்
கருவி கரணம் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்க ளிருடிகள் ஒருவரும் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சக்தி பராபரை சதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியார் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
விண் மயமான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவி யிடம்பொரு ளியாவுந்

தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந்தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீஷனுங் கூடிக் கலந்து
இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து

புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து
மவுன முத்திரையை மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவென காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென வுணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுள்ளருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூசை நைவேத் தியமும்
பக்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி

ஏத்திய னுதின மெளியேன் பணியக்
கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து
ஆக மதுர வமிர்த மளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவிலும் கனவிலும் நேசம் பொருந்தி
அருண கிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்து கவிமழை பொழிய
வாக்குக் கெட்டாவாழ்வையளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வழ்க்கை யிடையூ றகற்றிப்
புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி யென்ப தகற்றிக்
காப்ப துனக்குக் கடன்கண் டாயே

நல்வினை தீவினைநாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே ஈசனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சக்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே பராந்தகன் நீயே
பக்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேகியும் நீயே

உன்னரு ளன்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதன் கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்று நாடியும் முக்குண மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலா யிரத்து நானூற்று நாற்பத்தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளிய நித்தன்
பஞ்சாட் சரநிலை பாலித் தெனக்கு
செல்வமும் கல்வியுஞ் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயக
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்

புத்திரனே தரும் புண்ணிய முதலே
வெண்ணீ ரணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெருகுஞ் சரனை
அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா
கரிமுகவாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயி றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த்தடத் தருகிற்
றான த்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சி தானந்த சற்குருசரணம்
விக்கின விநாயகா தேவே ஓம்
அரகர சண்முக பவனே ஓம்
சிவ சிவ மஹாதேவ சம்போ ஓம்

வஞ்சி விருத்தம்

கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி யென்றிடக் காலனுங் கைதொழும்
கணபதி யென்றிடக் கரும மாதலால்
கணபதி யென்றிடக் கவலை தீருமே

வெண்பா

ஓரானைக் கன்றை யமையாள் திருமகனைப்
பேரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தைவரும் புத்திரசம் பத்து வரும்
சக்திதருஞ் சித்தி தருந்தான்...
Back to Top

This page was last modified on Tue, 09 Apr 2024 20:20:32 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

vinayagar agaval