![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
சிவபுராணம் & திருதொண்டர் தொகை
நமச்சிவாய பதிகங்கள் |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -Thirumurai Pathigam 3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே. | [1] |
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால், வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது; செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்; நம்பன் நாமம் நமச்சிவாயவே. | [2] |
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. | [3] |
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்; நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன், நாமம் நமச்சிவாயவே. | [4] |
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின், எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. | [5] |
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. | [6] |
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும், உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்- வரதன் நாமம் நமச்சிவாயவே. | [7] |
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே. | [8] |
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய், யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே. | [9] |
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள் வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்- விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய் நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே. | [10] |
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -Thirumurai Pathigam 4.011  
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ, கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், நல்-துணை ஆவது நமச்சிவாயவே! | [1] |
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை; ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்; கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது; நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே! | [2] |
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்; பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே! | [3] |
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும், விடுக்கிற்பிரான்! என்று வினவுவோம் அல்லோம்; அடுக்கற் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே! | [4] |
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்; அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்; திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.! | [5] |
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்; குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே! | [6] |
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும், ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும், நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே! | [7] |
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது; சொல் அக விளக்கு அது சோதி உள்ளது பல் அக விளக்கு அது பலரும் காண்பது; நல் அக விளக்கு அது நமச்சிவாயவே! | [8] |
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்- தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே; அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே! | [9] |
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன் பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ, நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -Thirumurai Pathigam 7.048  
மற்றுப் பற்று எனக்கு இன்றி,
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [1] |
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள், கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [2] |
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல் காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப் பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [3] |
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி, கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை, நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [4] |
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்; அஞ்சல்! என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்? பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [5] |
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின் மேல் ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப் பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [6] |
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன; நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டு இடை குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [7] |
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்! வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [8] |
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன், மாமணி என்று பேர் எண் ஆயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்; நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக் காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [9] |
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை, பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை- நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே. | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -Thirumurai Pathigam 8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! | [1] |
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! | [2] |
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! | [3] |
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்: | [4] |
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர், பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்; | [5] |
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி, கல்ஆ(ய்,) மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய், செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள், | [6] |
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள் ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே! | [7] |
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! | [8] |
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்; நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே! மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே! | [9] |
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை | [10] |
மறைந்திட மூடிய மாய இருளை, அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, | [11] |
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, | [12] |
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே! நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட, | [13] |
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! | [14] |
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் | [15] |
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய், | [16] |
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று | [17] |
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே, கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! | [18] |
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி! | [19] |