சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருக்கோடி (கோடிக்கரை)
2.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE
4.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெற்றி மேல் கண்ணினானே! நீறு
பண் - திருநேரிசை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jI9dsAR0N9g
5.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mJZCB9wqOjk
6.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் தலம் சேர் நெற்றி
பண் - திருத்தாண்டகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SggFtlZ_vRU

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.099   இன்று நன்று, நாளை நன்று  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!

[1]
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்,
நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ!
வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே!

[2]
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்,
தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்!
அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே!

[3]
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே!

[4]
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ!
பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான்,
கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே!

[5]
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப்
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை;
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே!

[6]
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்,
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ!
பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக்
கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே!

[7]
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து நீர்,
பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ!
வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே!

[8]
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்;
செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா
வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர்,
கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே!

[9]
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்,
பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை;
விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே!

[10]
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.051   நெற்றி மேல் கண்ணினானே! நீறு  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!

[1]
கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே!
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே!
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே!
கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே!

[2]
நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே!
ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே!
ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே!
கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!

[3]
காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே!
நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே!
ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!

[4]
பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே!
காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே!
கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே!

[5]
கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே!
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்!
மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்;
கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!

[6]
அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர் பாகத்தானே!
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே!
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே!

[7]
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே!
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே!
ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்!
கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!

[8]
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!

[9]
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.078   சங்கு உலாம் முன்கைத் தையல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

[1]
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்
ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும்
கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்:
பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.

[2]
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார்,
தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார்,
கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

[3]
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல்
ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால்,
கோமளஞ்சடைக் கோடிகாவா! என,
ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.

[4]
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும்,
நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல்,
கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால்
ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?

[5]
நாடி நாரணன், நான்முகன், வானவர்
தேடி ஏசறவும், தெரியாதது ஓர்
கோடிகாவனைக் கூறாத நாள் எலாம்
பாடிகாவலில் பட்டுக் கழியுமே.

[6]
வரங்களால் வரையை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர்,
குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என
இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.

[7]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.081   கண் தலம் சேர் நெற்றி  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;
விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[1]
வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;
பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;   பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;
செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;   திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;
கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[2]
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்; வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்;
இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ்   உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்;
கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[3]
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்;
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்; பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்;
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்; ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[4]
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்; மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்;
போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான் கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்;
நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்; நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்;
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[5]
கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்;
படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்;
அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்; அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்;
கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[6]
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய்; ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்;
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்; காளத்திக் கற்பகம் ஆய் நின்றான் கண்டாய்;
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய்; என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான் கண்டாய்;
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[7]
படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்;
நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்;
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்;
குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[8]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000