This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அற்புதத் திருவந்தாதி
11.004 அற்புதத் திருவந்தாதி ( )
Back to Top
காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி
11.004  
அற்புதத் திருவந்தாதி பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
[1]
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்நெஞ் சவர்க்கு.
[2]
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
[3]
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.
[4]
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான்.
[5]
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான்.
[6]
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன்.
[7]
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள்.
[8]
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு.
[9]
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று.
[10]
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது.
[11]
அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும் அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு.
[12]
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லே பாவந் தான்.
[13]
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான், தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து.
[14]
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி.
[15]
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண்.
[16]
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன்.
[17]
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத் தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று.
[18]
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு.
[19]
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்.
[20]
அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து.
[21]
வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை.
[22]
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது.
[23]
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
[24]
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று.
[25]
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு.
[26]
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண்.
[27]
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக, இவர்.
[28]
இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர்.
[29]
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
[30]
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு.
[31]
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
[32]
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம்.
[33]
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை யடும்.
[34]
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு.
[35]
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி.
[36]
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
[37]
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு.
[38]
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடி அணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து.
[39]
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
[40]
ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.
[41]
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ, இளங்குழவித் திங்கள் இது
[42]
திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே யறிவான் தனக்கு.
[43]
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவாறு என்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான்.
[44]
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது.
[45]
எளிய திதுஅன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற் றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம்.
[46]
திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு.
[47]
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா தது மதியொன் றில்லா அரா.
[48]
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தன்னோடே ஒப்பான் சடை.
[49]
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின் குலப்பாவை நீலக் குழல்.
[50]
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
[51]
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர்.
[52]
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
[53]
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு.
[54]
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு.
[55]
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம் நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
[56]
நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடவரவம் மேல்ஆட மிக்கு.
[57]
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
[58]
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவம் மேல்.
[59]
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ தம்மான் திருமேனி அன்று.
[60]
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது
[61]
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு.
[62]
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா.
[63]
நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று.
[64]
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு.
[65]
மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
[66]
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன் உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு.
[67]
சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி.
[68]
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனியவலம் உண்டோ எமக்கு.
[69]
எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
[70]
இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண்.
[71]
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங் கண்ணாளா ஈதென் கருத்து.
[72]
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி உள்ளமே எப்போதும் ஒது.
[73]
ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கலம்.
[74]
கலங்கு புனற்கங்கை ஊடால லாலும் இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு.
[75]
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து, பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து, எந்தாய் தழும்பேறி யேபாவ பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி.
[76]
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம் மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்; அறிந்தாடும் ஆற்றா தரங்கு.
[77]
அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து.
[78]
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு.
[79]
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால்.
[80]
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து.
[81]
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
[82]
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது.
[83]
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக் கண்டாலும் முக்கணாங் கண்.
[84]
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின்.
[85]
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்.
[86]
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள்.
[87]
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி.
[88]
ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்இதனைக் கூறு.
[89]
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட் டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை.
[90]
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென்
[91]
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க் கருளாக வைத்த அவன்.
[92]
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
[93]
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள்.
[94]
அவளோர் குலமங்கை பாகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ றென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமினிங் கார்.
[95]
ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து.
[96]
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல் உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக் களைந்தெழுந்த செந்தீ யழல்.
[97]
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு.
[98]
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தாய் ஆடுன் நடம்.
[99]
நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ றுருமேறோ ஒன்றா உரை.
[100]
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து.
[101]
This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000