சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.022   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி


Add audio link Add Audio
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.


1


மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.


2


உளம்மால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தாவா றுண்டோ உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.


3


அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.


4


அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்
கலராகி யானும் அணிவன் அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.


5


Go to top
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.


6


பரியானை ஊராது பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.


7


கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.


8


பதியார் பழிதீரா பைங்கொன்றை தாவென்
பதியான பலநாள் இரக்கப் பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்


9


அறமான நோக்கா தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் அறல்மானும்
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.


10


Go to top
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்த ஒளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.


11


கடியரவர் அக்கர் இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.


12


யாமானம் நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.


13


யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.


14


அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.


15


Go to top
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.


16


கடனாகம் ஊராத காரணமும் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி.


17


பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.


18


அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியுமற் றந்தோ அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.


19


வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரார் விமலன் வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.


20


Go to top
அயமால்ஊண் ஆடரவம் நாண ததள தாடை
அயமாவ தானேறார் ஆரூர் அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.


21


ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்
றாழும் இவளை அயராதே ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருள்வாய் தார்.


22


தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான் தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.


23


அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக் கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்
ஊர்தி எரித்தான் உறா.


24


உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள் எல்லாம் உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.


25


Go to top
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலிர்நாண் காமின் கலையாய
பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.


26


பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்கு மனைபுகுந்து பாவாய் பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.


27


ஆயம் அழிய அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.


28


தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால்வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.


29


கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.


30


Go to top
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்


31


குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.


32


திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ டென்னை யுடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.


33


உடைஓடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடைஆடை தோல்பொடிசந் தென்னை உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.


34


உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.


35


Go to top
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே இன்றியாம்
காட்டாநஞ் சேற்றான் காமரு வெண்காட்டான்
காட்டானஞ் சேற்றான் கலந்து.


36


கலம்பெரியார்க் காஞ்சிரம்காய் வின்மேரு என்னும்,
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.


37


கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.


38


மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனைஆ சறச்செற்ற வானோன் மனைஆய
என்பாவாய் என்றேனுக் யானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.


39


இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறைஆகம் இன்றருளாய் என்னும் இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.


40


Go to top
மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.


41


தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின்
செல்லுமெழில் நெஞ்சே தெளி.


42


தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.


43


புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.


44


நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டாள் மதி.


45


Go to top
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரைப்பர் என்னும் மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வங் கொண்ட வனப்பு.


46


வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள வனப்பால்
கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட்
கடற்றிரையும் ஈருங் கனன்று.


47


கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் கனன்றார்
உடம்பட்ட நாட்டத்தன் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.


48


உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன் உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு


49


வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா வடிவார்வேல்
முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார்
முற்கூட மாட்டா முலை.


50


Go to top
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.


51


வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.


52


வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.


53


அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரந் தீர்ந்தேன் அடியேனுக் கக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.


54


பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டில்
காலங்கை ஏந்தினான் காண்.


55


Go to top
காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.


56


பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.


57


ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோன் நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.


58


வந்தியான் சீறினும் வாழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.


59


நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.


60


Go to top
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும் ஆக இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.


61


ஆளானம் சேர்களிலும் தேரும் அடல்மாவும்
ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே ஆளான்போய்
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.


62


நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலன் பாயும் அலர்ந்து.


63


அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடை
அலங்கார வண்ணற் கழகார் அலங்காரம்
மெய்காட்டும் வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.


64


விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா
விரையார் பொழிலுறந்தை மேயான் விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.


65


Go to top
எனக்குவளை நில்லா எழிலிழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
கண்டத்தால் நெஞ்சேகாக் கை.


66


காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்குரக்குக் காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு.


67


அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.


68


தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.


69


அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதம் அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.


70


Go to top
உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை உவவா
றெழுமதிபோல் வாள்முகத் தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.


71


இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி இடமாய
மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.


72


முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னுமர்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.


73


புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.


74


மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.


75


Go to top
போந்தார் புகவணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் போந்தார்
இலங்கோல வாள்முகத் தீசனார்க் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி.


76


இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.


77


தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சாடமகுடர் தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.


78


பார்கால்வான் நீர்தீப்ப பகலோன் பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.


79


கோப்பாடி ஓடாதே நெஞ்சே மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றம் கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றாற் கிடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.


80


Go to top
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.


81


உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தால் ஊடே உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு.


82


பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.


83


கூற்றம் பொருளும்போற் காட்டியெற் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.


84


செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.


85


Go to top
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.


86


சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.


87


குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.


88


போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதங்க நீர்கரந்த புண்ணியற்குப் போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.


89


கற்றானஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் கற்றான்
அமரர்க் கமரர் அரக்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.


90


Go to top
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் ஆவா
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.


91


பகனாட்டம் பாட்டயரும் பாட்டோடாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி பகனாட்டந்
தாங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை.


92


தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.


93


பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான்
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.

94


சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும் ஆயிழைஈர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.


95


Go to top
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே ஆறாத
ஆனினர்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.


96


ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.


97


புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்டுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.


98


மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் வெய்ய
துணையகலான் நோக்கலான் போற்றிகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.


99


நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிவதனின் மிக்கதே நூறா
உடையான் பரித்தவெரி உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.


100


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+ pathigam no 11.022