சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
|
1
|
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், பெம்மான் என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.
|
2
|
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.
|
3
|
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.
|
4
|
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
|
5
|
Go to top |
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.
|
6
|
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.
|
7
|
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
|
8
|
நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்,
புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.
|
9
|
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
|
10
|
Go to top |
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.
|
11
|