வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத் தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி, மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார் கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.
|
1
|
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர் ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர, போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.
|
2
|
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை, மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்; இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார் கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.
|
3
|
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி, தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ, எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்- கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.
|
4
|
தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி, சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து, ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார் கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.
|
5
|
Go to top |
முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய், எளிவந்தார் போல், ஐயம் என்று, என் இல்லே புகுந்து, உள்ளத் தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண் பிறையாரே.
|
6
|
மூவா வண்ணர், முளை வெண் பிறையர், முறுவல் செய்து இங்கே பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப் போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர் தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.
|
7
|
தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார், குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார் கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.
|
8
|
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான், சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான், வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்- கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.
|
9
|
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு, ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார் ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும் சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.
|
10
|
Go to top |
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை, பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே, தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று, அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.
|
11
|