செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்- கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி, பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம் மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.
|
1
|
வயலின்கண் நீர்பாய அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும் கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும் காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழமணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள் நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர் அர்த்த நாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர் வீட்டுலகை அடைவர். | |
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி, கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி, உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில், அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.
|
2
|
காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும் செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம். | |
தோல் உடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண் நீறு துதைந்து, இலங்கு நூல் உடையான்; இமையோர் பெருமான்; நுண் அறிவால் வழிபாடு செய்யும் கால் உடையான்; கரிது ஆய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி மேல் உடையான்; இமையாத முக்கண்; மின் இடையாளொடும் வேண்டினானே.
|
3
|
புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத்தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய சுண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான். | |
சலசல சந்து அகிலோடும் உந்தி, சந்தனமே கரை சார்த்தி, எங்கும் பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி, பாய்ந்து இழி காவிரிப் பாங்கரின்வாய், கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே!
|
4
|
சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்துவந்து சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூலபாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம். | |
தளை அவிழ் தண் நிற நீலம், நெய்தல், தாமரை, செங்கழு நீரும், எல்லாம் களை அவிழும் குழலார் கடிய, காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி, துளை பயிலும் குழல், யாழ், முரல, துன்னிய இன் இசையால் துதைந்த அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.
|
5
|
கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன்கூடிய நீலோற்பலம் நெய்தல் தாமரை செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும் அவிழ்ந்து விழும் கூந்தலை உடைய உழத்தியர்களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும் பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப்பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம். | |
| Go to top |
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக் கரும்பு இன் கட்டிக் கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன், பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி, முன் நின்று, அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே.
|
6
|
நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத்தினவை வெல்லக் கட்டியை உடைப்பதால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறைபவனும் கரிதான கண்டமுடையவனும் திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேக நீர் மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழவல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர். | |
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக் குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!
|
7
|
தலையில் பிறையை அணிந்தவனும் பெரியோர்கள் தலைவனும் வேதங்களை அருளியவனும் மழுவாகிய வாளை உடையவனும் நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும் கனல் சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும் அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் குறட்பூதச் செல்வனுமாகிய திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம். | |
செற்றவர் தம் அரணம்(ம்) அவற்றைச் செவ் அழல் வாய் எரியூட்டி, நன்றும் கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி உற்றவர்தாம் உணர்வு எய்தி, நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற பெற்றமரும் பெருமானை அல்லால், பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே!
|
8
|
தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர்தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும் விடை மீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம். | |
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே, உரைக்கும் குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம் அல்லகண்டீர்; அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை காட்டுப்பள்ளி வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே!
|
9
|
நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து உச்சி வேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல்பருத்த புத்தர் இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத்தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும் மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க் கொன்றை புனைந்த வார்சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம். | |
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை, கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்- துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.
|
10
|
திருமகள் வாழும் தாமரை நீலம் நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப்பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த்தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசைகூட்டிச் சொன்னதும் தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர். | |
| Go to top |