சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான், படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான், மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான், விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.
|
1
|
சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும் இடையினின்று சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும் மழுப் படையை உடையவனும் பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவனும் மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தே கொண்டவனும் என்னை ஆளாக உடையவனும் விடைக்கொடி உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை. | |
ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய், மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய், ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய், வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.
|
2
|
ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய் ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய் சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய் முக்குண வடிவினனாய் எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய் ஐம்பெரும்பூதங்கள் ஆறுசுவை ஏழு ஓசை எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய் உயிரோடு ஒன்றாகியும் வேறாகியும் உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை. | |
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய! உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில் மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும் விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.
|
3
|
அன்றலர்ந்த மலர்களைச் சாத்தி வணங்கி உய்தி பெற அடியவர்களே வாருங்கள். உயர்ந்த உம் அன்போடு எம் அன்பையும் ஏற்றருளும் இறைவன் உறையும் கோயில் மும் என்ற ஒலிக்குறிப்போடு இசைபாடும் வண்டுகள் மலர்களைக் கிளறுவதால் திசையெங்கும் மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததும் தண்ணிய வயல்களைக் கொண்டதுமாகிய திருவீழிமிழலை. | |
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும், உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும், மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும், விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.
|
4
|
இசையும் அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை மெல்லோசை முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும் பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும் மண் புனல் உயிர் காற்று நெருப்பு சூரியன் சந்திரன் விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை. | |
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின் தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத் தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர் மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.
|
5
|
சுருதி யுக்தி அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும் அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும் திருப்பெயருடையவன். எங்கட்குத்தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை. | |
| Go to top |
கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்! என வானோர் எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப, வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல் வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.
|
6
|
சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் யோகியாய் வீற்றிருந்த காலத்து அசுரர்களால் இடருழந்த வானோர் காவாய் என வேண்ட சூரிய சந்திரராகிய சக்கரம் பூட்டிய பூமியைத் தேராகக் கொண்டு நான்முகன் வேதங்களாகிய தேரிற் பூட்டிய குதிரைகளைச் செலுத்த அக்கினிதேவனை வலிய வாயாகவும் வாயுதேவனை இறகாகவும் கொண்ட திருமால் ஆகிய அம்பை வாசுகி என்னும் பாம்பினை நாணாகப் பூட்டி மேருமலையாகிய வில்லால் செலுத்தித் திரிபுரங்களை எய்து அழித்த சிவபிரானது இடம் திருவீழிமிழலை. | |
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்; புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி, விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.
|
7
|
பிரமகபாலம் பொருந்திய திருக்கரத்தினன். யானையை உரித்ததால் கிடைத்ததொரு மேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத் தன்னடி பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க வரங்களை அளித்தவன். அப்பெருமானது இடம் வளர்ந்தோங்கிய புன்னை மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன்தாதுக்களை ஈன்று பச்சை மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற திருவீழிமிழலையாகும். | |
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி, பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.
|
8
|
தன்னை எதிர்த்து நிற்பார் யாரும் இல்லாத வலிமை பெற்ற அரக்கனாகிய இராவணன் வடதிசையிலுள்ள கயிலாயமலையைப் பற்றித் தூக்கினான். அவன் தலைகள் தோள்கள் ஆகியன நெரிய ஊன்றி அதனால் இடருழந்த அவன் பின்னர்ப் பணிந்தேத்த அவனுக்குப் பெரிதாகிய வாள் இராவணன் என்ற பெயர் ஆகியனவற்றைக் கொடுத்தருளிய மின்னல் போலப் பொலியும் சடைமுடியை உடைய சிவபிரானது இடம் திருவீழிமிழலையாகும். | |
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில, வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.
|
9
|
முன்னொரு காலத்து ஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிக்காட்டிய திருமாலும் அவ்வுலகங்களைப் படைத்தருளிய நான்முகனும் தன்னை அறியாதவாறு ஒளி பொருந்திய தீயுருவான சிவபிரான் உறையும் கோயில்; நீர் நிறைந்த பொய்கைகளில் பூத்த செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயில வெண் தாமரை சிவந்த தாதுக்களை உதிர்க்கும் திருவீழிமிழலையாகும். அன்னத்தின் நிறத்தால் செந்தாமரை வெண்தாமரை ஆயிற்று. அதன் கால்களின் செம்மையால் பொன்னிறத்தாதுக்கள் செந்தாதுக்கள் ஆயின. | |
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள், இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து, பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.
|
10
|
மயக்க உணர்வுடையவரும் பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும் நற் குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர் புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம் மிகுதியான தேனீக்கள் தேனை உண்டு களித்து ஒலி செய்யவும் பசுமை நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும் களிப்புற்ற மயில்களும் நிறைந்ததும் ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை அழகுறுத்துவதும் ஆகிய பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையாகும். | |
| Go to top |
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர் காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம் ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.
|
11
|
வீழிமிழலையுள் எழுந்தருளிய விகிர்தனாகிய இறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப் பதியில் தோன்றிய கலைவல்ல ஞானசம்பந்தன் பாடியருளிய பாடல்கள் பத்தினையும் யாழிசையில் பாட வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச் சிவப்பேறு எய்துவர். | |