சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்செம்பொன்பள்ளி - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு சுகந்தவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு சொர்னபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=4owEV1ZD9TU   Add audio link Add Audio

மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

1
மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக்கோயிலில் எழுந்தருளிய கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்தவையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.

வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.

2
கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய் சிறப்புப் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்தசடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.

வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

3
மலைகளில் செழித்து வளர்ந்த சந்தனமரங்களோடு அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.

மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

4
மழுவாகிய வாளை ஏந்தி உமையொருபாகனாய் வளம் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.

மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

5
மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு உடனாய் விளங்குபவனும் அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன்பள்ளியில் விளங்கும் சிவபிரானையே இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினைநில்லா.
Go to top

அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.

6
பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.

பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

7
அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா.

வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!

8
வானத்தில் விளங்கும் பிறை மதியை வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து இனிமை பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளியவனும் புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.

கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய,
நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை
ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.

9
நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும் பொன்னிறமேனியனாகிய பிரமனும் தேடிக்காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித்தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.

மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா! என்ன, நில்லா, இடர்களே.

10
அழுக்கேறிய உடலினராகிய சமணரும் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித்திரிபவர்களாகிய புத்தரும் பேசக்கூடாதவைகளைப் பேசித்திரிய அன்பர்கள் `ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!` என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.
Go to top

நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

11
தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்செம்பொன்பள்ளி
1.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மரு ஆர் குழலிமாது ஓர்
Tune - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
4.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
Tune - திருநேரிசை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   கான் அறாத கடி பொழில்
Tune - திருக்குறுந்தொகை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000