சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு அஞ்சனாட்சியம்மை உடனுறை அருள்மிகு முத்தீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=P_kgIT0mzcI   Add audio link Add Audio

வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

1
திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர் முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத் துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்பதுன்பங்களைக் கடந்தவர்.

அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.

2
சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவர் வேள்விகட்குரிய விதிகளை விளக்கி ஆறு அங்கங்களுடன் கூடிய அரிய வேதங்கள் நான்காகிய குற்றமற்ற பாடல் ஆடல் தாளச் சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்.

நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

3
போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டுள்ள வேடர்கள் காடுகளிலிருந்து வெட்டிக் கொணர்ந்து எரிக்கும் விறகுகளில் கரிய அகிலின் புகைமணம் வீசும் திருக்கற்குடிமாமலை இறைவர் பரந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்து விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச்சூடிய சைவராவர். அம்மலையில் மரமானவை அகிலன்றிப் பிறிதில்லை என்பதாம்.

ஒருங்கு அளி, நீ இறைவா! என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,
இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

4
மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண்யானையின் வாயில் பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை வாரிக்கொடுத்து ஊட்டும் திருக்கற்குடிமாமலை இறைவர் தேவர்கள் பெருமானே அனைவரையும் ஒருங்குகாத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டுப் பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதமாகக் கருதி உண்டு காத்த ஈசராவார்.

போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,
பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.

5
அழகிய பன்றிகள் நிலத்தைக் கிளைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக் கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடிமாமலை இறைவர் போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு பூதகணங்கள் புடைசூழ்ந்து வர மண்ணுலகில் தாமொரு வேடர் உருத்தாங்கி முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவராவார்.
Go to top

உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,
விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்
நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

6
நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல்மாலைகளாகிய தோத்திரங்களினாலே இறைவன் திருவருளில் கலந்த மெய்யடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடிமாமலை இறைவர் இறந்தவர்களின் எலும்பை அணிந்து ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிட்சாடனராய் மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களும் வெந்தழியுமாறு முனிந்தவர்.

மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.

7
தேனடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக்கட்டி தினைகளை விதைத்துக் கானகத்தில் வேடர்கள் தினைப்பயிர் விளைக்கும் திருக்கற்குடிமாமலை இறைவர் மானை இடக் கையிலும் மழுவை வலக்கையிலும் தரித்தவர். ஊன் பொருந்திய தலையோட்டை உண்கலனாக உகந்தவர்.

வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்
தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.

8
அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது தழையைப்பற்றி வளைத்து உண்ட களிறு அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில் விசையோடு சென்று கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும் திருக்கற்குடி மாமலை இறைவர் வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலைமலையின்கீழ் அவன் தோள்களும் வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்.

தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து
கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

9
வண்டுகள் இசை பாட நீண்ட பொழிலின் நீழலைக் கண்டு மகிழும் சிறந்த மயில்கள் ஆடும் திருக்கற்குடிமாமலை இறைவர் குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலாலும் அறிய ஒண்ணாத இயல்பினர். வெண்ணிறமான விடையை ஊர்ந்து வருபவர்.

மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.

10
காவியாடையணிந்த புத்தர்களும் கடுக்காய்ப் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும் நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய் நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும் சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும் இடர்களை அகற்றிக்காத்தவர் அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடிமாமலை இறைவர்.
Go to top

காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.

11
அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடிமாமலை இறைவரை நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை)
1.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வடம் திகழ் மென் முலையாளைப்
Tune - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
6.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
Tune - திருத்தாண்டகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
7.027   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடை ஆரும் கொடியாய்! வெறி
Tune - நட்டராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000