சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமாற்பேறு - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=2BP39HT21GU   Add audio link Add Audio

ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

1
சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர் கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார்.

தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை
அடைவார் ஆம், அடிகள்! என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே! உமை உள்கியே.

2
வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா! நின் அடியார்களே.

3
கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.

சால மா மலர் கொண்டு, சரண்! என்று,
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலம் ஆர் கண்ட! நின்னையே.

4
திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக் கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.

மாறு இலா மணியே! என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! என்றும் நின்னையே.

5
உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறுபூசி விளங்குபவரே ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.
Go to top

உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;
பரவாதார் இல்லை, நாள்களும்;
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று
அரையானே! அருள் நல்கிடே!

6
அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.

அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து, அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்
பரவிடக் கெடும், பாவமே.

7
இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திருமாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.

இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன்,
மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்
பரவுவார் வினை பாறுமே.

8
திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித்துதிப்பார் வினைகள் கெடும்.

தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்
நீசர்தம் உரை கொள்ளேலும்!
தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்
ஈசன் என்று எடுத்து ஏத்துமே!

9
ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும் கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.

மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே, வினை பாறுமே.

10
திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமாற்பேறு
1.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
Tune - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
1.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குருந்து அவன், குருகு அவன்,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
4.108   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
Tune - திருவிருத்தம்   (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
5.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் ஆற்றின் படை வேண்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
5.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏதும் ஒன்றும் அறிவு இலர்
Tune - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
6.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரானை; பாரினது பயன் ஆனானை;
Tune - திருத்தாண்டகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000