சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவேற்காடு - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு வேற்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வேற்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=MfFlB0vxtJ4   Add audio link Add Audio

ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

1
மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

2
ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள் இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

3
பூதகணங்கள் பாட சுடுகாட்டின்கண் நடனம் ஆடி வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும் சந்தனமும் நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,
வீழ்சடையினன், வேற்காடு,
தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,
பாழ்படும், அவர் பாவமே.

4
ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித் துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

காட்டினானும், அயர்த்திடக் காலனை
வீட்டினான், உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார், வினை ஒல்லையே.

5
மார்க்கண்டேயர் சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும் அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.
Go to top

தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
வேலினான், உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,
மாலினார், வினை மாயுமே.

6
தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள் மாய்ந்தொழியும்.

மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர், தீர்க்கமே.

7
வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர், செய் கழல்; திண்ணமே.

8
மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை அன்போடு வழிபட நினைந்தவர் அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

பரக்கினார் படு வெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற் காட்டூர்,
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே!

9
பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.

10
ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலாமொழியாக அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.
Go to top

விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.

11
விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவேற்காடு
1.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
Tune - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000