தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.
|
1
|
தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்ட வரும் , அரிய உயிர் போன்றவரும் , கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர் , கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார் . அருள் வழங்கும் அன்புடையவர் அவர் . | |
நீதியார், நினைந்து ஆய நால்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார், அடியார்தம் அன்பரே.
|
2
|
நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர். | |
விண் உலாம் மதி சூடி, வேதமே
பண் உளார், பரம் ஆய பண்பினர்,
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார், அடியார்க்கு நல்லரே.
|
3
|
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர். | |
முடியர், மும்மதயானை ஈருரி;
பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர்
கடிஉளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள், யாவையும் ஆய ஈசரே.
|
4
|
சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்றவர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார். | |
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர்
மங்கையர், மணிநீலகண்டர், வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை,
அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே.
|
5
|
தாமரை போன்ற திருவடியர் . தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர் . நீல மணி போன்ற கண்டத் தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர் , அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார் . | |
| Go to top |
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்,
காவலார் கருவூருள் ஆன்நிலை,
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!
|
6
|
தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்தவில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?. | |
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப்
பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர்,
கண்ணினார், கருவூருள் ஆன்நிலை
நண்ணினார், நமை ஆளும் நாதரே.
|
7
|
பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமைஅம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர். | |
கடுத்த வாள் அரக்கன், கயிலையை
எடுத்தவன், தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை,
கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே!
|
8
|
வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன். | |
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால்,
தொழுது மா மலரோனும், காண்கிலார்
கழுதினான், கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.
|
9
|
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான். | |
புத்தர் புன் சமண் ஆதர், பொய் உரைப்
பித்தர், பேசிய பேச்சை விட்டு, மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே!
|
10
|
புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள். | |
| Go to top |
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்,
சிந்தையில் துயர் ஆய தீர்வரே.
|
11
|
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர். | |