சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கருவூரானிலை (கரூர்) - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு கிருபாநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=xX-OlINJTaA   Add audio link Add Audio

தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.

1
தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்ட வரும் , அரிய உயிர் போன்றவரும் , கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர் , கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார் . அருள் வழங்கும் அன்புடையவர் அவர் .

நீதியார், நினைந்து ஆய நால்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார், அடியார்தம் அன்பரே.

2
நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர்.

விண் உலாம் மதி சூடி, வேதமே
பண் உளார், பரம் ஆய பண்பினர்,
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார், அடியார்க்கு நல்லரே.

3
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.

முடியர், மும்மதயானை ஈருரி;
பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர்
கடிஉளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள், யாவையும் ஆய ஈசரே.

4
சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்றவர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.

பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர்
மங்கையர், மணிநீலகண்டர், வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை,
அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே.

5
தாமரை போன்ற திருவடியர் . தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர் . நீல மணி போன்ற கண்டத் தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர் , அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார் .
Go to top

தேவர், திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்,
காவலார் கருவூருள் ஆன்நிலை,
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!

6
தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்தவில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?.

பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப்
பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர்,
கண்ணினார், கருவூருள் ஆன்நிலை
நண்ணினார், நமை ஆளும் நாதரே.

7
பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமைஅம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.

கடுத்த வாள் அரக்கன், கயிலையை
எடுத்தவன், தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை,
கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே!

8
வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன்.

உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால்,
தொழுது மா மலரோனும், காண்கிலார்
கழுதினான், கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.

9
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.

புத்தர் புன் சமண் ஆதர், பொய் உரைப்
பித்தர், பேசிய பேச்சை விட்டு, மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே!

10
புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.
Go to top

கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்,
சிந்தையில் துயர் ஆய தீர்வரே.

11
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கருவூரானிலை (கரூர்)
2.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,
Tune - இந்தளம்   (திருக்கருவூரானிலை (கரூர்) பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000