சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

கருப்பறியலூர் (தலைஞாயிறு) - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு கோல்வளையம்மை உடனுறை அருள்மிகு குற்றம்பொறுத்தநாதர் திருவடிகள் போற்றி

கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg   Add audio link Add Audio

சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

1
சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர்.

வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.

2
வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்றை மலர்மாலையை நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர்.

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்
போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற
நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.

3
வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர்.

மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன்,
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால்
கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.

4
மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய உமையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர்.

ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.

5
ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும் அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர்.
Go to top

விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.

6
இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவவந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.

ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.

7
உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டு மலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

8
புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர்.

பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

9
வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடி அறியாதவாறு எப்போதும் அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர்.

அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர்,
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு,
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே.

10
மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள். அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர்.
Go to top

நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

11
நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கருப்பறியலூர் (தலைஞாயிறு)
2.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
Tune - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
7.030   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து
Tune - நட்டராகம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000