மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
|
1
|
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது. | |
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
|
2
|
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது. | |
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
|
3
|
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது. | |
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
|
4
|
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது. | |
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
|
5
|
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது. | |
| Go to top |
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
|
6
|
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது. | |
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.
|
7
|
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது. | |
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
|
8
|
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது. | |
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
|
9
|
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது. | |
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
|
10
|
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது. | |
| Go to top |
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
|
11
|
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார். | |
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|