சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கடம்பூர் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Q-PqFOi6AJw   Add audio link Add Audio

வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

1
வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத் தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.

அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

2
பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப்பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.

இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.

3
இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம்போற்றுவோம்.

பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.

4
பறை சங்கம் முதலியன ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாட வீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேணவல்லவர் பெரியோர் ஆவர்.

தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

5
தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றைமாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.
Go to top

தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

6
குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.

பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்

7
சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டும் செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.

பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.

8
அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித்தொழத் தீயனகெடும்.

திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.

9
திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.

ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.

10
ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பலவேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.
Go to top

விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

11
விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடம்பூர்
2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் அமர் திங்களும் நீரும்
Tune - காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000