சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புகலி -(சீர்காழி ) - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=jAygpVU6KT8   Add audio link Add Audio

கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!

1
நெற்றிக் கண்ணையுடையவனும் , திருவெண் ணீற்றினைப் பூசியுள்ளவனும் , திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப் பண்ணுடன் இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி , மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள் , சிவபுண்ணியர்களாகிய , நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான் .

சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும்
பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர்,
காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!

2
மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும் , சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும் , இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான் , மலர்ப் பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான் .

கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக் கடைக்கண்டானும்,
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!

3
நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன் எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும் , அழகிய தந்தத்தை யுடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக் கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான் , மலைகள் போன்று உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனே யாவான் .

அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.

4
உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும் , அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும் , திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும் , திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாவான் .

சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்,
நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர்,
கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!

5
நல்ல சாமவேதத்தை அருளியவனும் , சிவனை நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும் , நூறாயிரம் திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும் , பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலைபெற்றி ருக்கும் அழகும் , குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம் பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவ பெருமானேயாவான் .
Go to top

இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!

6
மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோக நாதனும் , இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும் , திருப்புகலி நகரில் பாம்பு போன்ற இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந் தருளும் அழகிய சிவபெருமானேயாவான் .

சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!

7
திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிட மாகக் கொண்டவனும் , பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும் , வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலானவ னான சிவபெருமானேயாவான் .

கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே!

8
கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும் , வில்லேந்திப் போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும் , அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவ னான சிவபெருமானேயாவான் .

பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!

9
பொன்னிறப் பிரமனும் , பச்சைநிறத் திருமாலும் என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னா னெனக் காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான் , புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க அழகிய , குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானே யாவான் .

பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது ஓர்,
தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்-
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர்,
வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த மணவாளனே.

10
அசோக மரத்தையும் , அரசமரத்தையும் போற்றும் சமணர்கள் , புத்தர்கள் சொல்லும் உரைகளைப் போற்றாது ஒப்பற்ற தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும் இறைவன் தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானே யாவான் .
Go to top

பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.

11
பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை , ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலி -(சீர்காழி )
1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விதி ஆய், விளைவு ஆய்,
Tune - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
Tune - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடை அது ஏறி, வெறி
Tune - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இயல் இசை எனும் பொருளின்
Tune - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
3.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000