சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கோட்டாறு - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு ஐராபதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=N14WKJRXAM8   Add audio link Add Audio

வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.

1
வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான் . அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான் . அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை .

ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.

2
மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான , இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான் , வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான் .

இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!

3
சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன் . விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன் . கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன் , காய்களும் , கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!

4
இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன் . வேதங்களை அருளிச் செய்தவன் . இடபத்தை வாகனமாக உடையவன் . அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான் .

வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.

5
சிவபெருமான் நறுமணம் கமழும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன் . செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன் . அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன் , கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன் . அவனே எங்கள் தலைவன் .
Go to top

பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா,
வெந்து அமரும் பொடிப் பூச வல்ல விகிர்தன், மிகும்
கொந்து அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை, நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.

6
சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன் . மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருள்கின்ற , அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை .

துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!

7
துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான் . நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன் . பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன் . கடலும் , நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும் , எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ ?

இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.

8
இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க , அவன் வலிமையை அழித்த சிவபெருமான் , குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி , தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான் .

ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!

9
செருக்குடைய திருமாலும் , பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் . நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் . தேவர்கட்கெல்லாம் தேவனாவான் .

கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.

10
சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும் , சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால் , அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான் . திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடு கின்றவர்களும் , தேவர்கட்குத் தலைவராவர் .
Go to top

கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.

11
இடபத்தைக் கொடியாகவும் , வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க , திருநடனம் புரியும் அருளாளன் . அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளை யுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோட்டாறு
2.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,
Tune - சீகாமரம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
3.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000