ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.
|
1
|
சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர் . வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர் . அணிவது கோவண ஆடை . சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர் . இடபவாகனத்தில் ஏறியவர் . தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார் . | |
மருவு இலார் திரிபுரம் எரிய, மால்வரை,
பரு விலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்,
உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்
திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?
|
2
|
பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப் பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர் . அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா ? | |
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்-
வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர்
குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!
|
3
|
அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் , வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் . | |
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர், ஆண் அலர், பெண்ணும் அல்லது, ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே!
|
4
|
காந்தள் மலர்களிலும் , முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க , திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர் . ஆணுமல்லர் . பெண்ணுமல்லர் . திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார் . | |
விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,
சுழியில் ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்-
பழி இலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்;
கிழி இலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே?
|
5
|
விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி , இளம்பிறையையும் , கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான் . பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமைநிலையைப் போக்குவான் . | |
| Go to top |
விடை உடைக் கொடி வலன் ஏந்தி, வெண்மழுப்
படை உடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்;
துடி இடைக் கலை அல்குலாள் ஓர்பாகமா,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே!
|
6
|
இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி , வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான் . உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து , சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு , சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான் . | |
தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
பாயவன்-பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய் புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?
|
7
|
இறைவன் தூயஉடம்பினன் . தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன் . திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே ! | |
தொத்தின தோள் முடி உடையவன் தலை-
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்,
முத்தினை முறுவல் செய்தாள் ஒர்பாகமாப்
பொத்தினன், திருந்து அடி பொருந்தி வாழ்மினே!
|
8
|
கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான் . அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான் . முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன் . அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக . | |
நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,
சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;
பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய
தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!
|
9
|
நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க , இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான் . | |
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்,
சாலியாதவர்களைச் சாதியாதது, ஓர்
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்-
ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்மினே!
|
10
|
மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும் , திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும் , தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள் . எனவே , அவர்களின் உரைகளைக் கேளாது , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும் , திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக ! | |
| Go to top |
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்
நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.
|
11
|
தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில் , கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் , நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் , வினைப்பயன்களை நுகர்வதற் காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர் . | |