மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே
|
1
|
திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , தேவர்கட் கெல்லாம் தேவனாக விளங்குபவனும் , அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் ( திருநீறு , உருத்திராக்கம் , சடாமுடி ) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும் , மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும் , சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும் . | |
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;
ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய
ஆதி அந்தம்(ம்) இலா அடிகள், வேடங்களே
|
2
|
தேவர்கட்கெல்லாம் தேவனாக , தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவ பெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன . தீவினைகளைப் போக்குவன . கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன . | |
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன
தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே
|
3
|
தேன் மணமும் , வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவ பெருமானின் சிவவேடங்கள் , மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன . வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன . முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன . | |
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன;
கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே
|
4
|
இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து , வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன . நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன . கவிபாடும் ஆற்றலைத் தருவன . சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன . | |
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;
மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு
அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே
|
5
|
ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் திருவேடம் , இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி , தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும் . சிவலோகம் செல்லும் நெறிகாட்டும் . முக்தி நெறி காட்டும் . | |
| Go to top |
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா,
புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
|
6
|
சந்திரனைத் தொடுமளவு ஒங்கி வளர்ந்துள்ள , நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க . அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக . | |
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு
உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
|
7
|
அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன் குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும் . குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை . அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும் . அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் . | |
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
|
8
|
சிறந்த நந்தனவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம் , உலகத்தைத் தனக்குக்கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது . எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது . | |
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;
விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே
|
9
|
வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தனவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில் , பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன . கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன . அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன . | |
செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள்
உரு மருவப்படாத் தொழும்பர்தம் உரை கொளேல்!
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்கு
அருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!
|
10
|
நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும் , சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள் . அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா . இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம் , உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும் . | |
| Go to top |
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
|
11
|
தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவ பெருமானைப் பற்றி , ஓங்கிய மாடமாளிகைகளும் , சோலைகளும் நிறைந்த , குளிர்ச்சிபொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை . | |