பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?
|
1
|
பெண் யானைகள் பின்தொடர , பெரிய தும்பிக்கை யுடைய ஆண்யானையானது , விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி , மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி , அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது ? | |
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
|
2
|
நுண்ணிய இடையையும் , பெரிய அல்குலையும் , சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும் . | |
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீா
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.
|
3
|
பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம் , இரவில் அப்போது மலரும் நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , கஸ்தூரி என்னும் மான் , புழுகுப்பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள் , சந்தனம் , புனித நீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி , மலர்தூவி அர்ச்சித்துப் போற்றி வழிபடுவர் . | |
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.
|
4
|
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவ பெருமானை , மனத்தைப் பொறிவழிஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன் , பூவும் நீரும் கொண்டு , முழவு முழங்க , இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம் செய்து வழிபடுகின்ற மெய்யடியார் களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக் குறைகள் தீருமோ ! | |
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.
|
5
|
பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல் , எலும்புமாலையும் அணிந்து , அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர் . தேவர்களின் நகரமான அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர் . | |
| Go to top |
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீா
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.
|
6
|
பள்ளம் போன்ற படர்ந்த சடையில் , வெள்ளம் போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான் . கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற , திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குவதால் , அவ்வடியவர்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம் வழிபடும் . | |
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.
|
7
|
பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை , குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம் , வாக்கு , காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும . | |
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.
|
8
|
வாட்போர் வலியாலும் , வேற்படைப் பயிற்சியாலும் , பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு , பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள் . | |
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே
|
9
|
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான் , நிலையிலா பிரமன் , திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான் . அழகிய குறிஞ்சியும் , முல்லையும் சார்ந்த நிலமான , தேன் மணம் கமழத் திகழும் திருக் கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர் . | |
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.
|
10
|
உறியினிடத்துச் சுரைக்குடுக்கை , கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும் , இறைவனை உணராத பாவிகளாகிய சமணர் , புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும் , காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை . மடமையுடைய பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைகூப்பித் தொழுவது நம் கடமையாகும் . | |
| Go to top |
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.
|
11
|
சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை . ( அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .) | |